
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் மயக்கம் போட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துறையூர் அண்ணா பேருந்து நிலையம் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், தற்காலிக பேருந்து நிலையம் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் செயல்பட்டு வருகிறது. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, பேருந்துக்காக நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், வழக்கம்போல் வெளியூர் செல்ல வந்த பெண் ஒருவர் கடும் வெயிலில் நீண்ட நேரம் நின்றதால் திடீரென மயங்கி விழுந்தார். அங்கு இருந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், துணை சபாநாயகர் ரவிசங்கர் அரசு பணிமனையை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது பணியில் இருந்த அரசு பேருந்து பணிமனை உதவி இளநிலையாளரை தொடர்பு கொண்டபோது தொலைபேசி அழைப்பை ஏற்காததால், ரவிசங்கர் நேரடியாக சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு பணிமனை அதிகாரி உதயகுமாரிடம் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பேருந்து இயக்க நிலை குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் துறையூர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், தற்காலிக பேருந்து நிலையத்திற்கு பொதுமக்கள் எளிதில் சென்று வர புதிய போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வசதிகளை அரசு ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
<b> Total Views: 168 </b>

