
பெரம்பலூர். ஜீவா
பெரம்பலூர், ஏப்ரல் 21:
பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடை அருகே நேற்று இரவு சுமார் 12 மணியளவில், கலால் மேற்பார்வை அலுவலர் பழனிசெல்வன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது குன்னம் தொகுதிக்குட்பட்ட கீழ்ப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் கிருஷ்ணன் (25) இயக்கிய காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் பயணம் செய்த கீழ்ப்புலியூரைச் சேர்ந்த திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெயராமன் (64) உடன் இருந்தார்.
சோதனையின் போது, கார் டிக்கியில் இருந்த 5 அட்டை பெட்டிகளில் ரூ.2,44,97,500 (இரண்டு கோடியே நாற்பத்திநான்கு லட்சத்து தொண்ணூற்று ஏழாயிரத்து ஐந்நூறு ரூபாய்) ரொக்கப் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, காரும் பணமும் பறிமுதல் செய்யப்பட்டு, பெரம்பலூர் தேர்தல் நடத்தும் அலுவலர் அனிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், பணம் கொண்டு சென்ற இருவரையும் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் மூலம் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக வருமான வரித்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

