
அரியலூர் ஏப்:7
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வஞ்சினாபுரம் கிராமத்தில் வாக்கு சேகரிக்க வந்த போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கரை, அப்பகுதி மக்கள் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் 2021 சட்டமன்றத் தேர்தலில் குன்னம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் சிவசங்கர், கடந்த 5 ஆண்டுகளில் தங்கள் பகுதிக்கு எந்தவொரு நலத்திட்டங்களையும் செய்யவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, அப்பகுதியில் உள்ள பாலத்தின் குறுக்கே சாலையைப் பெயர்த்து எடுத்துவிட்டு, புதிய சாலைப் பணிகளை முடிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் ஆவேசமடைந்தனர்.
இந்நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு, இன்று வஞ்சினாபுரம் பகுதிக்கு வாக்கு சேகரிக்க வந்த அமைச்சரின் வாகனத்தை மக்கள் ஊருக்குள் விடாமல் தடுத்து நிறுத்தி
“கடந்த 5 ஆண்டுகளாக எங்கள் ஊருக்கு என்ன செய்தீர்கள்? உடைக்கப்பட்ட சாலையைச் சீரமைக்காத நிலையில் இப்போது மட்டும் எதற்காக வருகிறீர்கள்?” என்று பொதுமக்கள் அமைச்சரிடம் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். மேலும் கீழே இறங்கி வந்து உங்களால் அதனை பார்வையிட முடியுமா என்றும் சாலையின் குறுக்கே நின்று மக்கள் மறியலில் ஈடுபட்டதால் அமைச்சரின் வாகன அணிவகுப்பு நீண்ட நேரம் அங்கேயே நின்றது.
செய்தியாளர் சுபாஷ் செல்வம்

