
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு மகாத்மா பிரதர்ஸ் நடத்தும் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அல்லித்துறையில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது.
இப்போட்டியை ஸ்ரீரங்கம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி விளையாட்டு வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்து போட்டியை தொடங்கி வைத்தார்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கபடி போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் வெற்றி பெறும் ஆண்கள் பிரிவு அணிக்கு முதல் பரிசாக ரூ.75 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.50 ஆயிரம், 3 மற்றும் 4-ம் பரிசாக ரூ.30 ஆயிரமும், சுழல் கோப்பையும் வழங்கப்படுகிறது. இதே போன்று பெண்களுக்கான பிரிவில் முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. 2 முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.30 ஆயிரமும், 4-ம் பரிசாக ரூ.20 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
கபடி போட்டி தொடக்க விழா நிகழ்ச்சியில் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் திருவரங்கம் ஆனந்த், திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஸ்ரீரங்கம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

