
விக்கிரமங்கலம், ஜூன் 25:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய போலீசார், அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
ஸ்ரீபுரந்தான் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் குணமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவர்கள் சிறுவயதிலேயே புகையிலை மற்றும் போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் உடல் மற்றும் மனநலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், போதைப்பொருள் பழக்கத்தால் குடும்பம் மற்றும் சமூகத்தில் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அத்துடன், சாலை விதிகளை பின்பற்றாமல் செல்லும்போது ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து விளக்கி, பாதுகாப்பான சாலைப் பயணத்திற்கான வழிமுறைகளும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறப்பட்டன.

“சிறந்த இந்தியாவை உருவாக்கும் பொறுப்பு மாணவர்களின் கைகளில்தான் உள்ளது” என வலியுறுத்திய போலீசார், சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட மாணவர்களை ஊக்குவித்தனர்.
பள்ளி வளாகங்களில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விக்கிரமங்கலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

