
செய்தியாளர் : அருண் 90959 25936
விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திட்டமிடப்பட்டிருந்தது.
விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி ஆற்றில் தண்ணீரை திறந்து விட மறுத்துவரும் கர்நாடக அரசிடம் ரூ.1 லட்சம் கோடி இழப்பீடு கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அய்யாக்கண்ணு சென்னை சென்று போராட்டத்தில் பங்கேற்பதைத் தடுக்க போலீசார் அவரை திருச்சியில் வீட்டு காவலில் வைத்தனர்.
இதையடுத்து போலீசார் மற்றும் அய்யாக்கண்ணு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், போலீஸ் பாதுகாப்புடன் நான்கு பேர் மட்டும் சென்னை சென்று முதலமைச்சரின் தனிப்பிரிவில் கோரிக்கை மனு அளிக்க அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது.

நான்கு பேர் மட்டுமே செல்வோம் என்று அய்யாக்கண்ணு தரப்பில் உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கு சென்னை செல்ல போலீசார் அனுமதி வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

