
விக்கிரமங்கலம், மார்ச் 31:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையில் போலீசார் பெரிய திருக்கோணம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இடையத்தான்குடி சாலையிலிருந்து பெரிய திருக்கோணம் நோக்கி வந்த மாட்டு வண்டியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். இதைக் கண்ட மாட்டு வண்டி ஓட்டுநர், வண்டியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் போலீசார் மாட்டு வண்டியை சோதனை செய்ததில், மருதையாறு படுகை பகுதிகளில் இருந்து பெரிய திருக்கோணம் நோக்கி மணல் கடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய வண்டி ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

