
செய்தியாளர் : விஜய்
வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் சிறுவன் வாசித்த மன்றாட்டில் ஏற்பட்ட தவறுக்கு பேராலய நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலகப் பிரசித்தி பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 23-ஆம் தேதி மாலை குடந்தை ஆயர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற திருப்பலியின் போது, நம்பிக்கையாளர்கள் மன்றாட்டு வாசிப்பில் ஈடுபட்ட சிறுவன், “திருத்தந்தை 14-ஆம் லியோ” என்று கூற வேண்டிய இடத்தில் தவறுதலாக “14-ஆம் விஜய்” என்று வாசித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பேராலய அதிபர் இருதயராஜ் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், “அந்த சிறுவனுக்கு முறையாக பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பதற்றத்துடன் வாசக மேடைக்கு சென்றதால் தவறுதலாக அந்த வார்த்தை இடம்பெற்றுள்ளது. விசாரணையில், ‘திருத்தந்தை 14-ஆம்’ என்று சரியாக தொடங்கி வாசித்தபோதும், பதற்றத்தின் காரணமாக ‘விஜய்’ என்று கூறிவிட்டதாக சிறுவன் தெரிவித்தான். அவன் கூறியது உண்மை என்பது தெரியவந்தது,” என்றார்.
மேலும், “இந்த சம்பவம் எங்களுக்கும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. இனி இதுபோன்ற தவறுகள் வழிபாடுகளில் நடைபெறாத வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பலரும் தெரிவித்த ஆலோசனைகளுக்கும் கருத்துகளுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்,” என பேராலய நிர்வாகம் சார்பில் தெரிவித்தார்.

