
செய்தியாளர் : சுபாஷ் செல்வம்
பெரம்பலூர், மே 31:
பெரம்பலூர் நகரின் சங்குபேட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
விழாவையொட்டி மாலை 6 மணியளவில் மகா தீபம் ஏற்றப்பட்டு, அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், தேன், இளநீர், திருமஞ்சனம், ஜவ்வாது உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பெண்கள், மகளிர் குழுவினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். உலக நன்மை, பருவமழை தவறாமல் பெய்ய வேண்டும், தானிய உற்பத்தி பெருக வேண்டும், பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டும் என பக்தர்கள் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.
சங்குபேட்டை அன்னதான குழுவினர் சார்பில் அபிஷேகப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அன்னதானம் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியை சங்குபேட்டை அன்னதான குழுவினர் முன்னின்று நடத்தினர். இதில் கோயில் பூசாரி வெ. நீதிதேவன், நிர்வாகி கண்ணபிரான், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
<b> Total Views: 18 </b>

