
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கோவிந்தாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு கட்டப்பட்ட சுமார் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தற்போது மிகவும் சேதமடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தினமும் குடிநீர் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தொட்டியின் தூண்கள் மற்றும் கட்டமைப்பில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால், எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய அபாயம் நிலவுகிறது.
குறிப்பாக, கிராம மக்கள் பலரும் அந்த தொட்டியின் அடிப்பகுதிக்குச் சென்று குடிநீர் பிடித்து வருவதால், திடீரென ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உயிரிழப்பு உள்ளிட்ட பெரும் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக அச்சம் நிலவுகிறது.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, பெரும் விபத்து ஏற்படும் முன்பே சேதமடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை உடனடியாகபோர்க்கால அடிப்படையில் அகற்றி, அதற்கு பதிலாக புதிய பாதுகாப்பான குடிநீர் மேல்நிலைத் தொட்டியை அமைத்து தர தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிருஷ்ணாபுரம் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
<b> Total Views: 55 </b>

