திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நீதித்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து பழங்குடியின மக்களுக்கான சிறப்பு நல முகாமை நடத்தியது. இம்முகாமிற்கு தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் தலைமை தாங்கினார்.
பழங்குடியின மக்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் அடிப்படை அரசு சேவைகள் எளிதில் கிடைக்கும் வகையில் இச்சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்பட்டன.
முகாமில் கலந்து கொண்ட பழங்குடியின மக்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசு ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களுக்கு பல்வேறு வகையான அடையாள ஆவணங்கள் மற்றும் அரசு சேவைகள் தொடர்பான சான்றிதழ்களை துணை சபாநாயகர் ரவிசங்கர் நேரடியாக வழங்கினார்.
மேலும், பழங்குடியின மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளையும் அதிகாரிகள் கேட்டறிந்து, அவற்றை விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை மற்றும் சமூக நீதித்துறை அதிகாரிகள், வட்டாட்சியர், பல்வேறு அரசு துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.