
அரியலூர், ஜூலை 26:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கீழ கோவிந்தபுத்தூரில் ஏற்பட்ட தகராறில் இருவரை தாக்கியதாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ கோவிந்தபுத்தூரைச் சேர்ந்த மதியழகனின் மகன் சுரேஷ்குமார் (26), அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று, அவரது கடைக்கு எதிரே அதே பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவருடன் அறிவொளி (21) வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த சுரேஷ்குமாரின் தம்பி தினேஷ்குமார், “ஏன் சண்டையிடுகிறாய்?” என்று கேட்டு தகராறை சமரசப்படுத்த முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அறிவொளி, அவரது நண்பர்களான சிவா (25), ராஜேஷ் (26), ரஞ்சித் (19) ஆகியோருடன் சேர்ந்து தினேஷ்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனைத் தடுக்க வந்த சுரேஷ்குமாரையும் அவர்கள் தாக்கியதாக தெரிகிறது.
இதுகுறித்து சுரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில், விக்கிரமங்கலம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, அறிவொளி, சிவா, ராஜேஷ், ரஞ்சித் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

