தேர்தல் வாக்குறுதிகள் வெறும் வெற்று அறிவிப்புகள், என அரியலூரில் வி கே சசிகலா சாடல்

அரியலூர்

அரியலூர், ஏப்.16:அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் வி.கே. சசிகலா தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று
அரியலூர் ஆயிரங்கால் மண்டபம் அருகே நடைபெற்ற கூட்டத்தில், தனது கட்சியின் வேட்பாளர் எஸ். ராஜ்குமாரை ஆதரித்து பேசிய வி.கே. சசிகலா, திமுக மற்றும் அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகள் நிறைவேற்ற முடியாதவை என்றும், அவை மக்களை ஏமாற்றும் வெற்று அறிவிப்புகள் என்றும், அவை அனைத்தும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள், அவற்றை வாக்காளர்களாகிய நீங்கள் நம்பக் கூடாது என குற்றம்சாட்டினார்.
அவர் மேலும் பேசுகையில், திராவிட முன்னேற்ற கழகம் கடந்த 5 வருட ஆட்சியில் தமிழகத்தை ரூ.12 லட்சம் கோடி கடனில் ஆழ்த்தியுள்ளதாகவும், மக்களுக்கான திட்டங்களை முறையாக செயல்படுத்தவில்லை என்றும்,கடந்த தேர்தலில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறிய வாக்குறுதிகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை,அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு சம்பளங்கள் முறையாக வழங்கப்பட்டது. மேலும் மின்சார கட்டண உயர்வு மூலம் மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் பணத்திலிருந்து தான் நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள்,
மேலும், முன்னாள் முதலமைச்சர் அம்மா காலத்தில் தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்ததாகவும், தற்போது தனியாரிடமிருந்து அதிக விலையில் மின்சாரம் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் கையாலாகாத திமுக அரசு தான்.
தொடர்ந்து தனது கட்சியின் தேர்தல் அறிக்கையினை அவர் வாசித்தார் அதில், மகப்பேறு உதவி ரூ.24,000, மாணவர்களுக்கு மடிக்கணினி, கல்வி உதவித்தொகை உயர்வு, ஏழை மக்களுக்கு 5 லட்சம் வீடுகள், 10,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி, இலவச பருப்பு மற்றும் சமையல் எண்ணெய், முதியோர் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும்,
மேலும், 2.5 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்புதல், அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியிடங்கள் நிரப்புதல், கிராமப்புற சாலை மற்றும் குடிநீர் வசதிகள் மேம்பாடு, 25 தொழிற்பேட்டைகள் அமைத்தல், புதிய அம்மா உணவகங்கள் தொடங்குதல் போன்ற திட்டங்களும் நிறைவேற்றப்படும் என தெரிவித்து, இத்தகைய திட்டங்களின் பயன் மக்களுக்கு சென்றடைய எனது கட்சியின் வேட்பாளர் எஸ். ராஜ்குமாருக்கு தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என பேசினார்

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *