
பெரம்பலூர்
ஜீவா
பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முன்னாள் மண்டல அமைப்பு செயலாளர் தலைமையில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மறுசீரமைப்பை எதிர்த்து இன்று துறைமங்கலத்தில் உள்ள அவரது இல்லத்தில் விசிக உறுப்பினர்களுடன் கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடிகளை ஏற்றி கண்டன கோஷம் எழுப்பி அறப்போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது;
மத்திய அரசு இன்று அவசரகதியில் பாராளுமன்றத்தைக் கூட்டுகிறார்கள். இத்தகைய செயலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்தியா கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்த அவசர கூட்டம் எதற்காகக் கூட்டுகிறார்கள் என்றால், தொகுதி மறுவரையறை என்கிற காரணத்தைக் காட்டியும், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்கிற ஒரு தகவலைச் சொல்லியும் இந்தச் செயலைச் செய்கிறார்கள்.
ஐந்து மாநிலங்களில் பொதுத்தேர்தல் நடைபெறுகின்ற இந்தத் தருணத்தில், அந்த மாநில அரசியல் கட்சிகளை ஏமாற்றுகிற வேலையில் மோடி அரசு இதை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது.
தென் மாநிலங்களில் அவர்கள் எடுக்கின்ற இந்த முயற்சி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
வட மாநிலங்களில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதனால், அவர்களுக்கான இடஒதுக்கீடு அல்லது பிரதிநிதித்துவம் அதிகமாக வரும் என்கிற அடிப்படையில், ஆர்.எஸ்.எஸ் (RSS) வழிகாட்டுதலில் மத்திய அரசு மற்றும் என்.டி.ஏ (NDA) கூட்டணி அவசரகதியில் இந்த நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறார்கள்.
மத்திய அரசு தென் மாநிலங்களை வஞ்சிக்கின்ற இந்தச் செயல்பாட்டை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்தியா கூட்டணியின் தமிழ்நாடு தலைவர் மற்றும் தேசியத் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் அழைப்பை ஏற்று, தமிழக முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி, வி.சி.க தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று எனது இல்லத்தில் கருப்புக்கொடி ஏற்றி எங்களது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மத்திய அரசின் 33 சதவீத பெண்கள் இடஒதுக்கீட்டை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறோம், அதை நாங்கள் எதிர்க்கவில்லை.
ஆனால், விடுதலைச் சிறுத்தைகளின் கோரிக்கையான 50 சதவீத பிரதிநிதித்துவ இடஒதுக்கீட்டை அரசு அறிவிக்க வேண்டும்.
தொகுதி மறுவரையறை என்கிற பெயரில் மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இது தென் மாநில மக்களை ஏமாற்றும் வேலை.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தனியாகச் சிறப்பு கூட்டத்தொடர் கூட்டி, அனைத்து கட்சித் தலைவர்களுடன் விவாதித்து, அதை 50 சதவீத இடஒதுக்கீடாக அறிவிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவித்தார்.

