
திருச்சி மாவட்டம் துறையூரில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான மனமகிழ் மன்றத்தில், விதிமுறைகள் மீறி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சட்டமன்ற துணை சபாநாயகர் ரவிசங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகம் முழுவதும் அரசு மதுபான கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கடைகள் திறக்கப்படாத நிலையில், துறையூர் பகுதியில் உள்ள தனியார் மனமகிழ் மன்றத்தில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், தமிழக அரசு 10 ரூபாய் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து அங்கு நேரில் சென்ற துணை சபாநாயகர் ரவிசங்கர், கடையில் நடைபெறும் விற்பனையை ஆய்வு செய்தார். அப்போது விதிமுறைகளை மீறி கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், சில பாட்டில்களில் அரசு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், காலி பாட்டில்களை திரும்ப பெறாதது, உறுப்பினர் சேர்க்கை முறையாக மேற்கொள்ளாமல் மதுபானங்கள் விற்பனை செய்தது, அரசு மதுபான கடைகளில் இருந்து வாங்கப்பட்ட மதுபானங்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை சபாநாயகர் ரவிசங்கர், சம்பவம் தொடர்பாக அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், விதிமுறை மீறல்கள் உறுதியாகும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
<b> Total Views: 96 </b>

