
திருச்சி மாவட்டம் துறையூரில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ATMA) மற்றும் மாநில விரிவாக்கத் திட்டங்களில் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ், ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.

வேளாண்மைத் துறையின் சார்பில் இயற்கை வேளாண்மைக்கு தேவையான இடுபொருட்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், அதிக முளைப்புத் திறன் கொண்ட விதைகள், இயற்கை உரங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சாகுபடி முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், பாரம்பரிய நெல் வகைகளின் சிறப்புகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பு அவசியம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

வேளாண்மை பொறியியல் துறை சார்பில் நவீன விவசாய உபகரணங்கள், இயந்திரமயமாக்கல் தொழில்நுட்பங்கள் மற்றும் உழைப்புச் செலவைக் குறைக்கும் கருவிகள் குறித்து செயல்விளக்கத்துடன் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று, பல்வேறு துறைகளின் அரங்குகளை பார்வையிட்டு நவீன மற்றும் இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து பயனுள்ள தகவல்களை பெற்றுச் சென்றனர்.
<b> Total Views: 51 </b>

