
செய்தியாளர்: விஜய்
நாகப்பட்டினம் மாவட்டம் ஏனங்குடி அருகே உள்ள ப.புளியக்குடியைச் சேர்ந்த விவசாயி பாஸ்கரன், தனது உறவினர்களுடன் நேற்று நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷை சந்தித்து மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
“எனக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். எனது முதல் மகன் பார்த்தசாரதி (27), இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு கடந்த 2022-ஆம் ஆண்டு வேலைக்காக மலேசியா சென்றார். அங்கு அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் கையுறைகள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 28-ஆம் தேதி திருகண்ணபுரம் போலீஸ் நிலையத்தில் இருந்து எனது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு, மலேசியாவில் பணிபுரியும் நிறுவனத்தில் பார்த்தசாரதி மற்றொரு நபரால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த தகவலை கேட்டு எங்கள் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தோம்.
உடனடியாக குடும்பத்தினருடன் போலீஸ் நிலையத்திற்கு சென்று விசாரித்தோம். அப்போது எஸ்.பி. அலுவலகத்திலிருந்து தகவல் வந்ததன் அடிப்படையில் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், கூடுதல் தகவல்களுக்கு நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தை அணுகுமாறும் கூறினர்.
அமைதியான குணம் கொண்ட எனது மகனை திட்டமிட்டு கொலை செய்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காலதாமதம் இன்றி அவரது உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
<b> Total Views: 78 </b>

