அரியலூர்,
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து சமாதானத்தின் அடையாளமாக புறாக்களைப் பறக்கவிட்ட மாவட்ட ஆட்சியர், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
விழாவில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 51 பயனாளிகளுக்கு ரூ.3.13 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், சிறப்பாக பணியாற்றிய 45 காவலர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 285 அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, 6 பள்ளிகளைச் சேர்ந்த 360 மாணவ, மாணவிகள் பங்கேற்ற தேசப்பற்று கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளை விழாவில் பங்கேற்றவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
பின்னர், தோட்டக்கலைத் துறை சார்பில் மலர்கள் மற்றும் பழங்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த சுதந்திர தின விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், காவல்துறையினர், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
<b> Total Views: 13 </b>


