
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தம்பாளையம் பகுதியில் தனியார் தானிய சேமிப்பு கிடங்கை அரசு வாடகைக்கு எடுத்துள்ள நிலையில், அதற்கான ஒப்பந்தத்தில் கட்டிட உரிமையாளரும், அரசுத் தரப்பினரும் கையெழுத்திடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ராமன் கலந்து கொண்டு, கிடங்கு தொடர்பான பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமாரும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ஆனால், துறையூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சட்டப்பேரவையின் துணை சபாநாயகருமான மூ. ரவிசங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்காதது தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

குறிப்பாக, அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அருகிலுள்ள தொகுதியைச் சேர்ந்த பெரம்பலூர் எம்.எல்.ஏ. பங்கேற்ற நிலையில், நிகழ்ச்சி நடைபெற்ற துறையூர் தொகுதியின் எம்.எல்.ஏ. மற்றும் துணை சபாநாயகர் ரவிசங்கர் பங்கேற்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதுமட்டுமின்றி, அமைச்சரின் வருகையை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகைகளிலும் ரவிசங்கரின் படம் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனால், “துணை சபாநாயகர் ரவிசங்கர் ஓரம் கட்டப்படுகிறாரா?”, “அவருக்கு நிகழ்ச்சி குறித்து முறையான அழைப்பு வழங்கப்பட்டதா?”, “தொகுதி சார்ந்த முக்கிய அரசு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்காததற்கு காரணம் என்ன?” என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

ஒரே நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்ற நிலையில், துறையூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ரவிசங்கர் பங்கேற்காததும், வரவேற்பு பதாகைகளில் அவரது படம் இடம்பெறாததும் துறையூர் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது வெறும் நிகழ்ச்சி ஏற்பாட்டில் ஏற்பட்ட சாதாரண தவறா? அல்லது அரசியல் ரீதியாக ரவிசங்கருக்கு முக்கியத்துவம் குறைக்கப்படுகிறதா? என்ற விவாதம் தற்போது துறையூர் பகுதியில் தீவிரமடைந்துள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட தரப்பினரின் விளக்கம் வெளியாகும் பட்சத்தில், இந்த விவகாரத்தின் பின்னணி மேலும் தெளிவாகும்.
<b> Total Views: 131 </b>

