
அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில், குன்னம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) வேட்பாளர் சரண்யா அன்பழகனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த நிகழ்வில், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.
பிரச்சார கூட்டத்தில் பேசிய ரவி பச்சமுத்து, தமிழ்நாடு மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்றும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். குன்னம் தொகுதியில் போட்டியிடும் சரண்யா அன்பழகன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டிற்கு மிக முக்கியமானது எனக் குறிப்பிட்டார். ஐஜேகே வேட்பாளர் சரண்யா அன்பழகனை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும், குன்னம் தொகுதியில் குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மேலும், மாநிலத்தில் ஆட்சி மாற்றம் அவசியம் எனவும், தற்போதைய அரசை மக்கள் நிராகரிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை குறிப்பிட்டு, மாற்றத்திற்கான அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில், அரியலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தாமரை ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் தொகுதி பாமக வேட்பாளர் வைத்தி உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்
செய்தியாளர் சுபாஷ் செல்வம்

